உற்சாகமான கொண்டாட்டத்துடன் புத்தாண்டு பிறந்து விட்டது.
இந்த தடவை என்னுடைய புத்தாண்டுக் கொண்டாட்டம் லண்டனில்.
தேம்ஸ் நதிக்கரையின் ஓரத்தில், பிக் பென் கடிகாரம் பன்னிரண்டு அடித்ததும் வண்ண விளக்குகள் ஒளிர, பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்த கொண்டாட்டம் விடியும்வரை நீண்டது. ஒரு புதிய அனுபவம்.
வழக்கம் போலவே புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கூடிய ஏராளமான மின்னஞ்சல்களை நண்பர்கள் அனுப்பியிருந்தனர்.
அதிலும் நண்பர் ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாக இந்தப் புத்தாண்டில் பதினாறு பேறுகளையும் பெற வேண்டுமென்று வாழ்த்தியதுடன் பதினாறு பேறுகளையும் வரிசைப்படுத்தியிருந்தார்.
நம்ம ஊர்த் திருமணங்களில் மணமக்களைப் '' பதினாறும் பெற்று வாழ்க '' என வாழ்த்துவதைக் கேட்டிருக்கிறேன்.
எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு. இந்த பதினாறு பேறுகள் என்பவை வழி வழியாகச் சொல்லப்படுவையா ? அல்லது நம் இலக்கியங்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான பட்டியல் ஏதேனும் உண்டா ? என்று .
நண்பருடைய மின்னஞ்சலின் உந்துதலால் இந்த சந்தேகம் மீண்டும் உயிர் பெற, நம் இலக்கியங்களை அலசத் தொடங்கினேன்.
சற்று தேடலுக்குப்பின் இந்தப் பாடல் கிடைத்தது.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வராத நட்பும்
குன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்
தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஓர்
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும், உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டுகண்டாய்
அலையாழி அறி துயிலும் மாயனது தங்கையே !
ஆதிக் கடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுக பாணி !
அருள்வாமி அபிராமியே !!
திருநாவுக்கரசர் திருக்கடவூரில் உறைந்திருக்கும் அபிராமி அன்னையின்மேல் பாடிய பதிகம் இது. இந்தத் திருக்கடவூர் மயிலாடுதுறையிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அமுதீசர் - அபிராமி அன்னை ஆலயம் மிகப் பிரசத்திப் பெற்றது. அமுதீசர் அருளால் மார்க்கண்டேயன் என்றும் பதினாறு வயதை பெற்றது இத்தலத்தில்தான். அபிராமி பட்டர் திருக்கடவூர் அபிராமி அன்னையின் மீது 100 பாடல்களைக் கொண்ட அந்தாதி பாடியுள்ளார். சரி, தலபுராணம் போதும். இனி பாடலைப் பார்க்கலாம்.
இந்தப்பாடலில் சொல்லப்பட்டிருக்கும் பதினாறு செல்வங்களையும் நான் புரிந்து கொண்டபடி இங்கே தருகிறேன்.
1 கற்றும் மறக்காத கல்வி
2 நீண்ட ஆயுள்
3 குறையாத இளமை
4 நோயில்லாத உடல்
5 வஞ்சனையில்லாத நட்பு.
6 சோர்வில்லாத மனம்
7 அன்புள்ள மனைவி
8 நல்ல சந்ததி (சந்தானம் - சந்ததி, பரம்பரை )
9 குறையாத புகழ்
10 உண்மை - சொல் தவறாமை
11 தடையில்லாத கொடை
12 செல்வம்
13 நீதி தவறாத குணம்
14 துன்பம் இலாத வாழ்வு.
15 மாறாத பக்தி
16 பெரியவர்களின் கூட்டு
என் நண்பர் அனுப்பியிருந்த பதினாறுக்கும், இந்தப் பட்டியலுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அவருடைய பட்டியலின் மூலம் எதுவென்று தெரியவில்லை. அறிந்ததும் வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
( பின்னிணைப்பு :
பதினாறு பேறுகளில் ஒன்றாக சொல்லப்படும் '' அன்புள்ள மனைவி '' மற்ற எல்லாவற்றையும்விட முக்கியம் போலும். (அனுபவஸ்தர்கள் உறுதி செய்யவும் ;-) )
ஏனென்றால் இதே கருத்தை வலியுறுத்தும் மேலும் ஒரு பாடல். ஔவையார் பாடியது.
கொடிது கொடிது
கேட்கின் நெடுவடிவேலோய் !
கொடிது கொடிது
வறுமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் வறுமை
அதனினும் கொடிது
ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது
அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கை உண்பதுதானே !!
பொருள் - உலகத்திலேயே கொடியது அன்பில்லாத மனைவியின் கையால் தினமும் உண்பது தான்.
எத்தனை பேருக்கு இக்கொடுமை வாய்த்திருக்கிறதோ ?? :-))
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment