Friday, December 28, 2007

சமைக்கப் பழகுங்க !!!

சில கேள்விகள் !!

நீங்க எப்பவாச்சும் உங்க வீட்டு சமையல்கட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கீங்களா ? உங்க அம்மா எப்படி சமையல் பண்ணுராங்கன்னு பாத்திருக்கீங்களா ?

இந்த கேள்விகளுக்கு உங்க பதில் 'இல்லை' அப்படின்னா, நீங்க நம்ம கட்சி.. இந்த பதிவு உங்களுக்காகதான்.. மேலே படிங்க..

நானும் இப்படித்தான். தூத்துக்குடியில் படிக்கும் போதும் சரி, படிச்சு முடிச்சு ஒரு வருஷம் அங்கேயே வேலை பார்த்தப்பவும் சரி.. எங்க வீட்டு சமையல்கட்டோட நீள அகலம் கூட என்னன்னு எனக்குத் தெரியாது..

சொந்த ஊர், அக்கறையான அம்மா சமையல், ராஜ வாழ்க்கை..

அம்மா சமையல்னு சொன்ன உடனே, மகாபாரதக் கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது.

அந்த காலத்துல 'துர்வாசர்' அப்படினு ஓரு முனிவர் இருந்தார், மிகப்பெரிய ரிஷி. ஆனா மனுஷன் மகா கோபக்காரர். அவருக்கு பிடிக்காத காரியங்களை யாராவது பண்ணினா, அவ்வளவுதான் !! 'இந்தா பிடி' னு, தேர்தல் வாக்குறுதி மாதிரி சாபத்தை அள்ளிக் குடுத்திடுவாரு.. இதனாலயே துர்வாசர்னா எல்லாருக்கும் ஒரு பயம்..

ஒருநாள், இந்த கோபக்கார முனிவர் கிருஷ்ண பகவானோட வீட்டுக்கு சாப்பிடப் போனாரு. துர்வாசருக்கு ஓரு பழக்கம் உண்டு. அவர் மனசுல என்ன நினைச்சுருக்காரோ அதை செஞ்சு பரிமாறுனா மட்டும்தான் சாப்பிடுவாரு. இல்லைனா, வழக்கம் போல சாபம்தான்..

துர்வாசரோட இந்த வழக்கம் தெரிஞ்சதுனால, எங்கே சாப்பாடு சரியில்லைன்னா முனிவர் கோபப்பட்டு ஏதாவது சாபம் குடுத்திடுவாரோனு கிருஷ்ணருக்கு ஒரே பயம். உடனே, தன்னோட ஆஸ்தான சமையல்காரனைக் கூப்பிட்டு, துர்வாசர் சாப்பிட வந்திருப்பதையும், முக்கியமா அவரோட கோபத்தைப் பத்தியும் சொல்லி, எப்படியாவது, '' அவரோட மனசுல நினைச்சு வச்சுருக்குறத சமைச்சிடு'' னு சொல்லிட்டார். சமையல்காரனும் தலையாட்டிட்டுப் போயிட்டான்.

மதியம் சாப்பாட்டு வேளை வந்தது. முனிவர் சாப்பிட உட்கார்ந்தார். இலையைப் பார்த்த உடனே அவருக்கு ஆச்சர்யம் தாங்கலை. ஏன்னா அவர் மனசுல நினைச்சபடியே பொரியல், கூட்டு, இனிப்புனு எல்லாமே அவருக்கு பிடிச்ச மாதிரியே இருந்தது. அவர் ஆச்சர்யத்தோட ' எல்லாமே எனக்குப் பிடிச்ச மாதிரி எப்படி சமைக்க முடிஞ்சது' னு கேட்டார். உடனே சமையற்காரன் கையைக் கட்டிக்கிட்டே சொன்னான். ''உங்க அம்மா யாரு ? அவங்க என்ன சமைப்பாங்கன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேங்க.. அந்த சமையலைச் செஞ்சா பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்கன்னு அதே மாதிரி செஞ்சேன் !!'னு சொன்னான். முனிவரும் சந்தோசமா சாப்பிட்டுட்டு வரம் குடுத்துட்டுப் போனாரு..

நிஜம்தான் இல்ல ! சாப்பாட்டோட அம்மாவோட விரலையும் சேர்த்துதானே ருசிச்சிருக்கோம்..

2004ல் நான் தூத்துக்குடியை விட்டு வெளியே வர வேண்டியதாயிடுச்சு.. அப்பகூட சமைக்கக் கத்துக்கணுமேன்ற ஆர்வம் கொஞ்சம்கூட இல்ல.. சென்னையில் இருந்த இரண்டு வருஷமும் ஹோட்டல் சாப்பாடுதான். முதல்ல கொஞ்சம் பிடிக்காத மாதிரி இருந்தாலும், அப்புறம் பழகிடுச்சு.. ஒரு நாளைக்கு ஒரு இடம், ஒரு ஹோட்டல்னு கொஞ்சம்கூட சலிப்பே இல்லாமல் திரிஞ்சிருக்கேன். அதுக்கப்புறம் விப்ரோல சேர்ந்து பெங்களுர்ல ஆறு மாசம். அப்பகூட கெஸ்ட்அவுஸ்தான் படியளந்தது.

2007 ஜனவரி கடைசியில இங்கிலாந்து வந்திருந்தேன். மூணு மாசம் - மே வரை. அப்பவும் சமையல் கத்துக்காமலேயே தப்பிச்சுட்டேன். :-) என்னோட ரூம்மேட் நல்லா சமைப்பான். அவனுக்கு காய் வெட்டிக் குடுத்தே மூணு மாசத்தைக் கழிச்சேன். திரும்பவும் இந்தியா.. பெங்களுர் கெஸ்ட்அவுஸ் வாழ்க்கை.. என்ஜாய் மாடி.. (கன்னடத்தில் மாடி - பண்ணு அப்படின்னு அர்த்தம்)

காத்து எப்பவும் ஒரே திசையில அடிக்குமா என்ன ?

போன ஜுன்ல திரும்பவும் இங்கிலாந்து. இந்த முறை ஆபத்பாந்தவன் யாருமில்லை. அப்பவே என் வயித்துப் பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சு...

முதல் ஒரு வாரம் ஹோட்டல்ல தங்கியிருந்தேன். நான் பட்டபாடு.. அப்பப்பா.. பாரதியார் பாடியிருப்பாரே ! 'தாளம் படுமோ ! தறிதான் படுமோ !' னு. அதே பாடுதான்..

ஜுன் மாசம் என்பதால, குளிர் அதிகமில்லை. பிரச்சனை போஜனம் மட்டுமே !!

என்னோட மெனு இதுதான்.

காலை - பால், ரொட்டி, மக்காசோளம்,
மதியம் - சப்வே சாண்ட்விச்.
ராத்திரி - கே.எப்.சி சிக்கன்.

மூணு நாளைக்கு மேல தாங்கலை. சாதத்தைக் கண்ணால் பார்த்தாக் கூட போதும்னு ஆயிடுச்சு..

நான் தங்கியிருந்தது போர்ன்மவுத் (Bournemouth) அப்படினு ஓரு கடற்கரை நகரம். லண்டனிலிருந்து 2 மணி நேர பயணத்தொலைவில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலம்.

முக்கியமா பேச்சிலர் பார்டிக்கு (Stag Party) ரொம்ப பிரசித்தி பெற்ற இடம். ஆனா மருந்துக்கு கூட நம்ம ஊர் ஹோட்டல் ஒண்ணு கிடையாது..

வேற வழியே இல்லை. நேரா ஹோட்டல் ஹெட்குக் கிட்ட போய் சரணாகதி.

அவர்கிட்ட நிலைமையை சொல்லி, குறைந்தபட்சம் ராத்திரி ஒருவேளைக்காவது சாதம் வைக்க சொன்னேன். (இதெல்லாம் தேவையா ? :-) )

என்னைப் பாத்தா பரிதாபமா இருந்திருக்கணும் அவருக்கு. சரின்னுட்டார். மறுநாள் ராத்திரி, ஏதோ வெப்சைட்டைப் பாத்து குறிப்பெடுத்து, சாதமும் பருப்பு குழம்பும் பண்ணி வைத்திருந்தார். அன்றையிலிருந்து அடுத்த நாலு நாள், என்னை வச்சு ஒரு வழியா தமிழ் சமையல் கத்துக்கிட்டார்.

நான் - வலுக்கட்டாயமாய் அகப்பட்டுக்கொண்ட சோதனைச் சுண்டெலி. !!! :-)

போர்ன்மவுத் - ஒரு சுற்றுலாத்தலம் என்பதால், ஹோட்டல் வாடகை எல்லாமே கொஞ்சம் அதிகம்தான். அதனால ஹோட்டல காலி பண்ணிட்டு (சமைக்க தெரியாத) ப்ரெண்ட்ஸ் மூணுபேர் சேர்ந்து ஒரு ப்ளாட் வாடகைக்கு எடுத்தோம்.
குத்துமதிப்பா நாலு பாத்திரங்களை வாங்கினோம். யாருக்கும் என்ன பண்ணனும் தெரியாது.. இருந்தாலும் எதாவது பண்ணனுமே ! இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சா பசிக்குமே !! :-)

கூகுளாண்டவர் அருளால் ஒரு தமிழ் வெப்சைட் கிடைச்சது - அறுசுவை.காம் (http://www.arusuvai.com/). பரிட்சைக்கு தயார் பண்ணுகிற மாதிரி உட்கார்ந்து படித்தோம். பருப்புக்கு பதிலா, உப்பு நிறைய போட்டு முதன்முதலா செஞ்ச சாம்பாரோட ருசி இன்னமும் நாக்கிலேயே இருக்கு (அவ்வளவு உப்பு !!)



நீச்சல் பழகணும்னா முதல்ல தண்ணில விழணும்னு சொல்றது போல, தினமும் கையை சுட்டுக்கிட்டாவது எதாவது பண்ண ஆரம்பிச்சோம். முதல்ல கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், இப்ப கொஞ்சம் தேவலாம். சாம்பார், ரசத்தைத் தாண்டியும், புதுசா முயற்சி பண்ணி பார்க்கிறோம்..

தெரியாத ஊருல இவ்வளவு தூரம் கஷ்டப்பட்ட பிறகுதான் தோணுது. நம்ம ஊருல இருக்கும் போதே ஏன் கத்துக்கலைன்னு.. ஒருவேளை 'நம்ம எங்கே கரண்டி பிடிக்கப் போறோம்?' அப்படின்ற அலட்சியமோ ?

அம்மாகிட்ட இருந்து பொண்ணுங்க மட்டுமில்ல பசங்களும் சமைக்கக் கத்துக்குறது நல்லது. நாளைக்கு எங்கே இருப்போம்னு யாருக்குத் தெரியும் ?

அதனாலதான் அனுபவஸ்தன் சொல்றேன்..

.NET 3.0, Silverlight எல்லாம் இருக்கட்டும், முதல்ல சமைக்க பழகுங்க !!

1 comment:

Unknown said...

அற்புதமான கருத்து ... அழகிய சொல்வடிவத்துடன் கூடிய அருமையான உரைநடை ... உனது தமிழ்ப் புலமையைக் கண்டு வியக்கிறேன் ... !!!