சோகமும், துரோகமும், பழி வாங்கல்களும் நிறைந்த இலங்கை வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயம் அதே குணாதிசயங்களோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இம்முறை யுத்தம் இரு சிங்கள இனவாதிகளுக்குள்ளாகவே. தமிழின அழித்தொழிப்பிற்காக யுத்த களத்தில் தோளோடு தோளாக ஓரணியில் நின்ற இருவர் கூட்டணி, அரசியல் களத்தில் இரு வேறு அணிகளாக எதிரெதிரே, பதவிக்காக மோதிக் கொண்ட போதே அடுத்த கட்ட களேபரங்களுக்கு இலங்கை தயாராகிவிட்டது. நடந்து முடிந்த இலங்கை ஜனநாயகத் தேர்தலில் 11 சதவீத வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ஷே வெற்றி பெற்ற உடனேயே எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு சற்று தாமதமாக நேற்று நடந்திருக்கிறது - எதிரணி வேட்பாளரும், முன்னாள் இராணுவக் கட்டளைத் தளபதியுமான ஜெனரல்.சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை.
நேற்று (திங்கட்கிழமை), இரவு 9.30 மணி அளவில் ராஐகீய மாவத்தையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சரத் பொன்சேகாவும் அவரது ஊடகப் பேச்சாளரான சேனக சில்வாவும் இலங்கை இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்சேகாவும் அவரது பாதுகாவலர்களும் சேர்ந்து ஜனாதிபதி மகிந்தவையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகவும், இலங்கையில் இராணுவப் புரட்சிக்கு முயன்றதாகவும் பொன்சேகா மீது
கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது காவல்துறையினர் பொன்சேகாவை மிகக் கேவலமான முறையில் நடத்தியதாக, அவருடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு பொன்சேகா நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு (இது பற்றி இன்னமும் பல மர்மங்கள் விலகாத நிலையில் புலிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் பிரபாகரன் உயிரோடு நலமுடன் இருப்பதாக அறிவித்திருக்கிறது.), புலிகளுக்கு எதிரான முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சாதனையைப் (??) பங்கு போட்டுக் கொள்வதிலும், புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் ஆயதங்களைக் கையாளுவதிலும் ஏற்பட்ட விரிசல் பின்னர் பூதாகரமாகி மகிந்தவையும் பொன்சேகாவையும் எதிரெதிர் அணிகளில் நிறுத்தியது. அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, தான் தனிமைப்படுத்துவதாக உணர்ந்த பொன்சேகா உடனடியாக இராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிரடியாக
அரசியலில் நுழைந்தார். அதற்கு முந்திய நாள் வரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் சிங்களப் பேரினவாதத்தின் பிரதிநிதியாய் தன்னை வரித்துக் கொண்டு, கற்பனையும் செய்யவியலாத இராணுவ அடக்குமுறைகளை, தமிழினத்தின் மீது பிரயோகித்துவிட்டு மக்கள் மன்றத்திற்கு வந்ததும் வெள்ளை பைஜாமா குர்தாவில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழர் உரிமைக்காக பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார் பொன்சேகா.
கடந்த ஐந்தாண்டுகளாக மகிந்த, அவரது சகோதர்களான பசில் மற்றும் கோத்தபாய அடங்கிய மூவர் அணியின் அராஜகத்தையும், சர்வாதிகாரப் போக்கினையும் சகித்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இலங்கை எதிர்க்கட்சிகளுக்கு பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தேவ தூதரின் வரவாகவே தோன்றியது. எந்தவித அதிகபட்ச நிபந்தனைகளும் இல்லாமல், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகயான ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, தீவிர சிங்கள இனவாதக் கட்சியான ஜேவிபி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவை பொன்சேகாவை ஆதரித்தன. கடந்த மூன்று வருடங்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட யுத்தமானது இலங்கையின் பொருளாதாரத்தை மிக மோசமாக (பணவீக்க விகிதம் 28 % என்ற அளவிற்கு) சேதப்படுத்தியிருந்தது. விலைவாசி உயர்வு, தனிநபர் வருமானம் குறைவு, போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு முழுமையான பலன்கள் வழங்கப்படததால் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் மீதிருந்த அதிருப்தி இப்படி ஒவ்வொரு காரணமும் பொன்சேகாவுக்கு சாதகமாகவே அறியப்பட்டன.
இது ஒருபுறமிருக்க, போரின் வெற்றியை முன்னிறுத்தி மொத்த சிங்கள வாக்குகளையும் அள்ளி விடலாம் என்ற கனவு, பொன்சேகாவின் திடீர் அரசியல் பிரவேசத்தால் முற்றிலும் கலைந்து போன தோற்றத்தால் தன் வெற்றி குறித்தே கலங்கிப் போயிருந்தார் மகிந்த. தேர்தல் பிரசாரத்தில் கூட ஆவேசமான மகிந்தவைப் பார்க்க முடியவில்லை. இது மட்டுமின்றி "தீவிர மன அழுத்தத்தினால் அலரி மாளிகையிலேயே அடைந்து கிடைக்கிறார்", "அழுத கண்கள், வீங்கிய முகத்தோடு புத்த ஆலயத்தில் என் தம்பிகள் எனது அரசியல் வாழ்க்கையை முடித்து விட்டார்கள் என பிட்சுகளிடம் கதறினார்.", "மொத்த குடும்பத்தினருடன் விமானமேறி வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடப் போகிறார்" என மகிந்தவைப் பற்றி விதவிதமான வதந்திகள் இலங்கை முழுவதும் றெக்கை கட்டின. பொன்சேகா வேறு போர்க் காலங்களில் நடந்த அத்துமீறல்களை மக்கள் மன்றத்திலும், போர்க் குற்றங்களுக்கான நீதிமன்றத்திலும் முன் வைப்பேன் என மகிந்த கம்பெனிக்கு பீதி ஏற்றினார்.
இலங்கை பத்திரிக்கைகளும், தேர்தல் கருத்துக் கணிப்புகளில் பொன்சேகாவையே, முன்னிறுத்தின. எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தலுக்கு முந்தைய நாள் இலங்கை முன்னாள் அதிபரான சந்திரிகாவும் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்க, அப்பொழுதே பொன்சேகா வெற்றி பெற்று விட்டதைப் போன்றதொரு மாயை இலங்கையை ஆக்கிரமித்தது. ஆனால் மறுநாள் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறாக இருந்தன. சிங்களர்கள் மிகத் தெளிவான முடிவினை வழங்கியிருந்தார்கள். தமிழின அழிப்பை முன்னெடுத்துச் சென்ற மகிந்தவையே, சிங்களப் பேரினவாதத்தின் தனிப் பெரும் தலைவராக பெரும்பான்மை சிங்களர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சென்ற முறை மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மகிந்த, இந்தமுறை 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பொன்சேகாவை தோற்கடித்து இருந்தார். தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெருவாரியாக பெற்றிருந்த பொன்சேகாவின் தோல்வி நிச்சயம் எதிர்பாராதது என்றே இலங்கை அரசியல்
பார்வையாளர்கள் வியக்கின்றனர். தேர்தல் நாளன்று திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் ஏழுக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதனால் தமிழர்கள் அதிக அளவில் ஒட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை. இதுவும் பொன்சேகாவின் தோல்விக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது.
தேர்தலில் தோல்வியற்ற அரசியல்வாதிகளின் வழமையான வாக்கியமான "மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன். தேர்தலில் அராஜகம் வெற்றி பெற்று விட்டது" என்று சொல்லிவிட்டு பாதுகாவலர்களோடு ஹோட்டலில் போய் பதுங்கிக் கொண்டார் பொன்சேகா. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளன்றே கைது செய்யப்படலாம் என்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவிய வதந்தியை உறுதிப்படுத்தும் விதமாக பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்ட இராணுவம் அவரது முப்பத்திரண்டு பாதுகாவலர்களையும் அவசரச் சட்டத்தின் கீழ் அள்ளிச் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பொன்சேகா தான் போர்க் குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பது உறுதி என்றும் முடிந்தால் மகிந்த தன்னைக் கைது செய்து பார்க்கட்டும் என சவால் விடுத்தார். பொன்சேகாவின் சவால் கிரேம்ப்ளின் பல்கலைகழகத்தின் டாக்டர் பட்டத்தைப் பெறுவதற்காக ரஷ்யா சென்றிருந்த மகிந்தவிடம் தெரிவிக்கப்பட பொன்சேகாவின் கைது இனிதே நடந்தேறியிருக்கிறது.
பொன்சேகா கைதைத் தொடர்ந்து அவருடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, அந்த கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் உடனடியாக கைதுசெய்யவும், பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவரது ஜெனரல் தரத்தை ரத்துச் செய்து, சாதாரண இராணுவச் சிப்பாய் நிலைக்கு கொண்டுவந்து குடியுரிமையை ரத்து செய்யவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய தீர்மானித்திருப்பதாகவும் இலங்கை அரசுத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தியாவிலிருக்கும் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவைச் சந்தித்து ரணிலை மீட்டுத்தருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்நிலையில் பொன்சோ ராணுவ தலைமை தளபதி பதவி வகித்தவர் என்பதால், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை ராணுவ நீதிமன்றத்தில் விரைவாகவும், ரகசியமாகவும் விசாரித்து அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழக்க ராஜபச்சே உத்தரவிட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கற்பனைக்கும் எட்டாத எத்தனையோ விஷயங்கள் நடைபெற்றுவிட்ட இலங்கை அரசியலில் இதுவும் நடக்கலாம்.
போர் மிகத்தீவிரமாக இருந்த காலங்களில், தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவம் நிகழ்த்திய அத்துமீறல்களை சர்வதேச நாடுகள் கண்டித்த போது இராணுவத்திற்குத் தலைமை ஏற்றிருந்த பொன்சேகா சொன்ன பதிலின் சாராம்சம் இது. "இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இராணுவம் தன் கடைமையைச் செய்கிறது." இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொன்சேகாவின் மனைவி அனோகா கைது விஷயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார். காலச்சுழற்சி என்பது இதுதான் போலும். பொன்சேகாவிற்கு இது அவர் விதைத்த வினைகளின் அறுவடைக் காலம்.
மகிந்த வெற்றி, பொன்சேகா கைது, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் என இலங்கை அரசியல் நாடகத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்க, இது பற்றி எவ்வித பிரக்ஞையும் இன்றி என்றாவது ஒரு நாள் தன் சொந்த மண்ணுக்குத் திருப்பிப் போவோம் என்ற நம்பிக்கையில் முள்வேலி முகாம்களில் சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் வரிசையில் காத்திருக்கிறான் தமிழன். இப்போதைய சூழலில் அவனைப்பற்றி கவலைப்பட இலங்கை அரசியல்வாதிகளுக்கு நேரமும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment