Tuesday, February 9, 2010

சரத் பொன்சேகா கைது - அறுவடையாகும் வினைகள்

சோகமும், துரோகமும், பழி வாங்கல்களும் நிறைந்த இலங்கை வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயம் அதே குணாதிசயங்களோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இம்முறை யுத்தம் இரு சிங்கள இனவாதிகளுக்குள்ளாகவே. தமிழின அழித்தொழிப்பிற்காக யுத்த களத்தில் தோளோடு தோளாக ஓரணியில் நின்ற இருவர் கூட்டணி, அரசியல் களத்தில் இரு வேறு அணிகளாக எதிரெதிரே, பதவிக்காக மோதிக் கொண்ட போதே அடுத்த கட்ட களேபரங்களுக்கு இலங்கை தயாராகிவிட்டது. நடந்து முடிந்த இலங்கை ஜனநாயகத் தேர்தலில் 11 சதவீத வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ஷே வெற்றி பெற்ற உடனேயே எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு சற்று தாமதமாக நேற்று நடந்திருக்கிறது - எதிரணி வேட்பாளரும், முன்னாள் இராணுவக் கட்டளைத் தளபதியுமான ஜெனரல்.சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை.

நேற்று (திங்கட்கிழமை), இரவு 9.30 மணி அளவில் ராஐகீய மாவத்தையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சரத் பொன்சேகாவும் அவரது ஊடகப் பேச்சாளரான சேனக சில்வாவும் இலங்கை இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்சேகாவும் அவரது பாதுகாவலர்களும் சேர்ந்து ஜனாதிபதி மகிந்தவையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகவும், இலங்கையில் இராணுவப் புரட்சிக்கு முயன்றதாகவும் பொன்சேகா மீது
கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது காவல்துறையினர் பொன்சேகாவை மிகக் கேவலமான முறையில் நடத்தியதாக, அவருடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு பொன்சேகா நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு (இது பற்றி இன்னமும் பல மர்மங்கள் விலகாத நிலையில் புலிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் பிரபாகரன் உயிரோடு நலமுடன் இருப்பதாக அறிவித்திருக்கிறது.), புலிகளுக்கு எதிரான முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சாதனையைப் (??) பங்கு போட்டுக் கொள்வதிலும், புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் ஆயதங்களைக் கையாளுவதிலும் ஏற்பட்ட விரிசல் பின்னர் பூதாகரமாகி மகிந்தவையும் பொன்சேகாவையும் எதிரெதிர் அணிகளில் நிறுத்தியது. அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, தான் தனிமைப்படுத்துவதாக உணர்ந்த பொன்சேகா உடனடியாக இராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிரடியாக
அரசியலில் நுழைந்தார். அதற்கு முந்திய நாள் வரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் சிங்களப் பேரினவாதத்தின் பிரதிநிதியாய் தன்னை வரித்துக் கொண்டு, கற்பனையும் செய்யவியலாத இராணுவ அடக்குமுறைகளை, தமிழினத்தின் மீது பிரயோகித்துவிட்டு மக்கள் மன்றத்திற்கு வந்ததும் வெள்ளை பைஜாமா குர்தாவில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழர் உரிமைக்காக பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார் பொன்சேகா.

கடந்த ஐந்தாண்டுகளாக மகிந்த, அவரது சகோதர்களான பசில் மற்றும் கோத்தபாய அடங்கிய மூவர் அணியின் அராஜகத்தையும், சர்வாதிகாரப் போக்கினையும் சகித்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இலங்கை எதிர்க்கட்சிகளுக்கு பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தேவ தூதரின் வரவாகவே தோன்றியது. எந்தவித அதிகபட்ச நிபந்தனைகளும் இல்லாமல், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகயான ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, தீவிர சிங்கள இனவாதக் கட்சியான ஜேவிபி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவை பொன்சேகாவை ஆதரித்தன. கடந்த மூன்று வருடங்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட யுத்தமானது இலங்கையின் பொருளாதாரத்தை மிக மோசமாக (பணவீக்க விகிதம் 28 % என்ற அளவிற்கு) சேதப்படுத்தியிருந்தது. விலைவாசி உயர்வு, தனிநபர் வருமானம் குறைவு, போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு முழுமையான பலன்கள் வழங்கப்படததால் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் மீதிருந்த அதிருப்தி இப்படி ஒவ்வொரு காரணமும் பொன்சேகாவுக்கு சாதகமாகவே அறியப்பட்டன.

இது ஒருபுறமிருக்க, போரின் வெற்றியை முன்னிறுத்தி மொத்த சிங்கள வாக்குகளையும் அள்ளி விடலாம் என்ற கனவு, பொன்சேகாவின் திடீர் அரசியல் பிரவேசத்தால் முற்றிலும் கலைந்து போன தோற்றத்தால் தன் வெற்றி குறித்தே கலங்கிப் போயிருந்தார் மகிந்த. தேர்தல் பிரசாரத்தில் கூட ஆவேசமான மகிந்தவைப் பார்க்க முடியவில்லை. இது மட்டுமின்றி "தீவிர மன அழுத்தத்தினால் அலரி மாளிகையிலேயே அடைந்து கிடைக்கிறார்", "அழுத கண்கள், வீங்கிய முகத்தோடு புத்த ஆலயத்தில் என் தம்பிகள் எனது அரசியல் வாழ்க்கையை முடித்து விட்டார்கள் என பிட்சுகளிடம் கதறினார்.", "மொத்த குடும்பத்தினருடன் விமானமேறி வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடப் போகிறார்" என மகிந்தவைப் பற்றி விதவிதமான வதந்திகள் இலங்கை முழுவதும் றெக்கை கட்டின. பொன்சேகா வேறு போர்க் காலங்களில் நடந்த அத்துமீறல்களை மக்கள் மன்றத்திலும், போர்க் குற்றங்களுக்கான நீதிமன்றத்திலும் முன் வைப்பேன் என மகிந்த கம்பெனிக்கு பீதி ஏற்றினார்.

இலங்கை பத்திரிக்கைகளும், தேர்தல் கருத்துக் கணிப்புகளில் பொன்சேகாவையே, முன்னிறுத்தின. எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தலுக்கு முந்தைய நாள் இலங்கை முன்னாள் அதிபரான சந்திரிகாவும் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்க, அப்பொழுதே பொன்சேகா வெற்றி பெற்று விட்டதைப் போன்றதொரு மாயை இலங்கையை ஆக்கிரமித்தது. ஆனால் மறுநாள் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறாக இருந்தன. சிங்களர்கள் மிகத் தெளிவான முடிவினை வழங்கியிருந்தார்கள். தமிழின அழிப்பை முன்னெடுத்துச் சென்ற மகிந்தவையே, சிங்களப் பேரினவாதத்தின் தனிப் பெரும் தலைவராக பெரும்பான்மை சிங்களர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சென்ற முறை மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மகிந்த, இந்தமுறை 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பொன்சேகாவை தோற்கடித்து இருந்தார். தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெருவாரியாக பெற்றிருந்த பொன்சேகாவின் தோல்வி நிச்சயம் எதிர்பாராதது என்றே இலங்கை அரசியல்
பார்வையாளர்கள் வியக்கின்றனர். தேர்தல் நாளன்று திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் ஏழுக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதனால் தமிழர்கள் அதிக அளவில் ஒட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை. இதுவும் பொன்சேகாவின் தோல்விக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது.

தேர்தலில் தோல்வியற்ற அரசியல்வாதிகளின் வழமையான வாக்கியமான "மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன். தேர்தலில் அராஜகம் வெற்றி பெற்று விட்டது" என்று சொல்லிவிட்டு பாதுகாவலர்களோடு ஹோட்டலில் போய் பதுங்கிக் கொண்டார் பொன்சேகா. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளன்றே கைது செய்யப்படலாம் என்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவிய வதந்தியை உறுதிப்படுத்தும் விதமாக பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்ட இராணுவம் அவரது முப்பத்திரண்டு பாதுகாவலர்களையும் அவசரச் சட்டத்தின் கீழ் அள்ளிச் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பொன்சேகா தான் போர்க் குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பது உறுதி என்றும் முடிந்தால் மகிந்த தன்னைக் கைது செய்து பார்க்கட்டும் என சவால் விடுத்தார். பொன்சேகாவின் சவால் கிரேம்ப்ளின் பல்கலைகழகத்தின் டாக்டர் பட்டத்தைப் பெறுவதற்காக ரஷ்யா சென்றிருந்த மகிந்தவிடம் தெரிவிக்கப்பட பொன்சேகாவின் கைது இனிதே நடந்தேறியிருக்கிறது.

பொன்சேகா கைதைத் தொடர்ந்து அவருடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, அந்த கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் உடனடியாக கைதுசெய்யவும், பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவரது ஜெனரல் தரத்தை ரத்துச் செய்து, சாதாரண இராணுவச் சிப்பாய் நிலைக்கு கொண்டுவந்து குடியுரிமையை ரத்து செய்யவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய தீர்மானித்திருப்பதாகவும் இலங்கை அரசுத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியாவிலிருக்கும் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவைச் சந்தித்து ரணிலை மீட்டுத்தருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்நிலையில் பொன்சோ ராணுவ தலைமை தளபதி பதவி வகித்தவர் என்பதால், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை ராணுவ நீதிமன்றத்தில் விரைவாகவும், ரகசியமாகவும் விசாரித்து அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழக்க ராஜபச்சே உத்தரவிட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கற்பனைக்கும் எட்டாத எத்தனையோ விஷயங்கள் நடைபெற்றுவிட்ட இலங்கை அரசியலில் இதுவும் நடக்கலாம்.

போர் மிகத்தீவிரமாக இருந்த காலங்களில், தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவம் நிகழ்த்திய அத்துமீறல்களை சர்வதேச நாடுகள் கண்டித்த போது இராணுவத்திற்குத் தலைமை ஏற்றிருந்த பொன்சேகா சொன்ன பதிலின் சாராம்சம் இது. "இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இராணுவம் தன் கடைமையைச் செய்கிறது." இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொன்சேகாவின் மனைவி அனோகா கைது விஷயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார். காலச்சுழற்சி என்பது இதுதான் போலும். பொன்சேகாவிற்கு இது அவர் விதைத்த வினைகளின் அறுவடைக் காலம்.

மகிந்த வெற்றி, பொன்சேகா கைது, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் என இலங்கை அரசியல் நாடகத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்க, இது பற்றி எவ்வித பிரக்ஞையும் இன்றி என்றாவது ஒரு நாள் தன் சொந்த மண்ணுக்குத் திருப்பிப் போவோம் என்ற நம்பிக்கையில் முள்வேலி முகாம்களில் சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் வரிசையில் காத்திருக்கிறான் தமிழன். இப்போதைய சூழலில் அவனைப்பற்றி கவலைப்பட இலங்கை அரசியல்வாதிகளுக்கு நேரமும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை.

Monday, February 8, 2010

ஜெயராம் - மாட்டிக் கொண்ட மலையாளி

சினிமா நடிகர்களுக்கு இது போதாத காலம் போலும். சென்ற வாரம்தான் இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாகப் பேசி சிவசேனாவின் எதிர்ப்பையும் மிரட்டல்களையும் சம்பாதித்துக் கொண்டார். கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கும் மேலாக மும்பை அரசியல் மற்றும் திரைக்களங்களை சுறாவளி போல் சுழற்றி அடித்துக் கொண்டிருந்த அப்பிரச்சினை, தற்போது தான் சற்று ஓய்ந்தாற் போலிருந்தது. ஆனால் அதற்குள் மற்றுமொரு புயல் தமிழகத்தில் மையம் கொண்டிருக்கிறது. இந்தமுறை எக்குத்தப்பாகப் பேசி மாட்டிக் கொண்டிருப்பது பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் - ஜெயராம்.

ஜெயராம் நடித்து சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் மலையாள திரைப்படம் - ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ் (Happy Husbands). இத்திரைப்படத்தில் தன் வீட்டு வேலைக்காரியை "சைட்" அடிக்கும் கணவன் கதாப்பாத்திரத்தில் ஜெயராம்
நடித்திருக்கிறார். பட வெளியீட்டையொட்டி மலையாளத் தொலைக்காட்சியான ஏசியாநெட்டிற்கு அளித்த நேர்காணலில், "நிஜ வாழ்க்கையில் நீங்கள் வீ்ட்டு வேலை பார்க்கும் பெண்ணை சைட் அடித்துள்ளீர்களா?" என்ற கேள்விக்கு, "என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. போத்து (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும்" என்று கூறியிருந்தார். ஜெயராமின் இந்த வெளிப்படையான பதில்தான் அவரைச் சிக்கலில் மாட்டி வைத்திருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் போதெல்லாம் தன்னை "கும்பகோணத்துத் தமிழன்" எனக் குறிப்பிடும் ஜெயராமின் இந்த நேர்காணல் பற்றிய விஷயம் பத்திரிக்கைகளில் பரபரப்பாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, சென்னையில் உள்ள அவரது வீடும் காரும் தாக்கப்பட்டது. தமிழ் திரையுலகத்திலிருந்தும் ஜெயராமின் கருத்துக்குக் கண்டனக் குரல்கள் கேட்கத் தொடங்கின. தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர் இயக்கத்தின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஷா நிவாஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான சர்வதேச மாநாட்டிலும் ஜெயராமின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயராம் "தொலைக்காட்சி பேட்டியில் நான் சொன்னது நான் செய்த ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எதார்த்தமாக சொன்ன ஒரு ஜோக். கண்டிப்பாக அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு சொன்னது அல்ல. இது மனசாட்சி மீது ஆணை. இருந்தும் இது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை முக்கியமாக தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன்." எனத் தெரிவித்தார். முதல்வர் கலைஞரும் பிரச்சினையை இத்தோடு விட்டு விடுமாறு அறிக்கை மூலம் அறிவுறுத்த சற்று அமைதி திரும்பியிருக்கிறது.

இந்த குறிப்பிட்ட நேர்காணலில், ஜெயராம் குறிப்பிட்டதை கொஞ்சம் அதீத நகைச்சுவை உணர்வுடன் சொன்னதாகவே எடுத்துக் கொண்டாலும், தற்போது கிளம்பியிருக்கும் இப்பிரச்சனை மலையாளத் திரைப்படங்களில் தமிழின சித்தரிப்புகளைப் பற்றிய ஆய்வுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

கேரளத் திரையுலகில் தமிழின் ஆதிக்கம் அதிகம். மலையாளப் படங்களை விட நேரடித் தமிழ்ப் படங்கள் வியாபாரத்திலும் வசூலிலும் முன்னணி வகிக்கின்றன. பழசிராஜா திரைப்படத்திற்காக சென்னையில் நிருபர்களைச் சந்தித்த நடிகர் மம்மூட்டி இதனை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். கேரளக் கல்லூரி, திரையுலக விழாக்களிலும் கூட அதிகமாக இடம் பெறுபவை தமிழ்த் திரைப்படப் பாடல்களே.இது ஒருவகையில் கேரளத் திரையுலகிற்கு ஒரு அசௌகரியமான விஷயமானதகவே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட கேரளாவில் தமிழ்த் திரைப்படங்களை நேரடியாக வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை, முன்னணி நட்சத்திரங்கள் அங்கம் வகிக்கும் மலையாள திரை அமைப்பான "அம்மா" வினால் வலுவாக எழுப்பப்பட்டு அடங்கியது. இத்தகைய தொழில்ரீதியான காரணங்கள் மட்டுமின்றி அடிப்படையிலேயே தமிழர்கள் சுத்தமில்லாதவர்கள், மந்தபுத்தி உடையவர்கள் என்ற ரீதியிலேயே மலையாள அறிவிஜீவிகளின் மனப்பதிவு உள்ளதாகத் தோன்றுகிறது. இந்த மனோபாவம் இந்தியாவே கொண்டாடும் பல அறிவுஜீவி மலையாள இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்படங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். முக்கியமாக மோகன்லால் திரைப்படங்களில்.

இரண்டு முறை தேசிய விருது பெற்ற மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் பல படங்களில் தமிழர்களைச் சித்தரிக்கும் விதம் சற்று கடுமையாகவே இருக்கும். உதாரணமாக பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், ஸ்ரீனிவாசன், பார்வதி நடித்த படம் 'அக்கரை அக்கரை அக்கரை'. அமெரிக்காவில் நடைபெறும் கதையிது. அங்குள்ள பிரமாண்ட கட்டிடங்களை பார்க்கும் மோகன்லால் ஸ்ரீனிவாசனிடம், "எல்.ஐ.சி. பில்டிங்கின் முன்னால் நின்று வாய் பிளந்து பார்க்கும் தமிழர்கள் இதை பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்துடுவாங்களே" என்பார். தமிழர்களை மட்டம் தட்டும் இந்த வசனங்களை மிக உற்சாகமாக பேசியிருப்பார் மோகன்லால். 'நரன்' திரைப்படத்தில் தமிழில் பெயர் பலகை வைப்பதையும், தமிழர்களை கடைகளில் அனுமதிப்பதையும் எதிர்ப்பவராக வருவார் மோகன்லால். அதேபோல் தமிழர்களை கடைகளுக்குள் அனுமதிக்கும்போது மோகன்லால் சொன்னதைப் போன்று பல்வேறு பிரச்சனைகளை மலையாளிகள் எதிர்கொள்ள வேண்டிவருவதாக அப்படத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கும்.மோகன்லால், கிரண் நடித்த படமொன்றில் லாலின் அண்ணனாக வரும் நெடுமுடிவேணு கோக், பெப்சி மற்றும் அயல்நாட்டு பொருட்களை தனது கிராமத்தில் அனுமதிக்காமல் உள்ளூர் தயாரிப்புகளின் உற்பத்தியை பாதுகாத்து வருவார். அதை குலைக்கும் வில்லன் ஒரு தமிழர். அயல்நாட்டு தயாரிப்புகளை கேரள கிராமத்தில் இறக்குமதி செய்து, உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை சீர்குலைக்கும் வேலைகளை தமிழர்கள் செய்வதாக அப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

மோகன்லால் படங்கள் மட்டுமல்ல. வேறு பல மலையாளப் படங்களிலும் தமிழகத்தையும், தமிழர்களையும் கிண்டல் செய்யும் காட்சிகள் சாதாரணமாக இடம் பெற்றிருக்கும். 'உடையோன்' என்ற படத்தில் வில்லன் வழக்கம் போல ஒரு தமிழன். நாயகனிடம், "தமிழ்நாட்ல மழை பெய்ஞ்சா உங்க கிணத்துல தண்ணி" என்பார். அதற்கு நாயகன், "அதுக்கு உங்க ஊர்ல மழை பெய்ஞ்சாதானே!" என்பார். இதே படத்தில், தமிழ்நாடு வரும் நாயகனிடம், "கரும்பு சாப்பிடுங்க தமிழ்நாட்டு கரும்பு தேன் மாதிரி தித்திக்கும்" என்பார் வில்லன். அதற்கு நாயகன், "உங்க ஊர் கரும்புதான் தித்திக்கும். எங்க ஊர் தண்ணியே கரும்பு மாதிரிதான்" என்பார்.

இவை மலையாளத் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வரும் தமிழினச் சித்தரிப்புக்கான மிகச் சில ஆதாரங்களே. யதார்த்தத்தைப் பேசும் மலையாளத் திரைப்படங்களில் இத்தகைய அத்துமீறல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதே சமயம் மொழி எல்லைகளைக் கடந்த கலைஞர்களும் மலையாளத் திரையுலகில் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக இயக்குனர் சத்தியன் அந்திக்காடின் படங்களில் தமிழனும் மலையாளியும் சமம்தான் என்று எடுத்துச் சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதைக் குறிப்பிடலாம்.

தமிழ்த் திரைப்படங்களில் கேரளப் பெண்களை எப்பொழுதும் முண்டு கட்டி மாராப்பு இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்களோடு காட்சிப்படுத்துவதைப் போல, மலையாளத் திரைப்படங்களில் தமிழர்கள் குறுகிய வட்டத்திற்குள் கீழ்த்தரமாக (சற்று அதிகமாகவே) அடையாளப் படுத்தப்படுகின்றனர்.

கலைஞர்கள் இனம், மதம், மொழி பாகுபாடுகளைக் கடந்தவர்கள். மானிட நேசம் மட்டுமே அவர்களுடைய நோக்கமாய் இருத்தல் வேண்டும்.காரல் மார்க்ஸ் ஒருமுறை இப்படிச் சொன்னார் - "பகுத்தறிவை வளர்ப்பதற்குக் கலைகள் ஒரு கருவியாகும்". அத்தகைய வலிமையான ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மலையாள - தமிழ் திரையுலகங்கள் வேற்றுமைகளைக் கடந்து சமூக, தனி மனித, கலாசாரப் பிரச்சனைகளை மையப்படுத்தும் திரைப்படங்களைத் தர வேண்டும் என்பதே இவ்விரு மொழித் திரை ஆர்வலர்களின் ஆசையும் வேண்டுகோளும் ஆகும். கலைஞர்கள் கவனிப்பார்களாக !!

Thursday, February 4, 2010

கர்ண மோட்சம் - கலையும் வலியும்.

"அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன் ! பாரெங்கும் கீர்த்தி படைத்தேன். தனக் கர்ணன் என்று பெயரேடுத்தேன் ! நான் தனக் கர்ணன் என்று பெயரேடுத்தேன் ! " என்ற கூத்து வரிகளோடு தொடங்கி, ஒரு அழகான சிறுகதையின் நேர்த்தியோடு, சிறிதும் பகட்டில்லாத காட்சிகளாகவும் உரையாடல்களாகவும் விரிந்து, இறுதியில் காலம் காலமாய் கட்டிக் காப்பாற்றி வந்த கலைகளையும், கலைஞர்களையும் நாகரீக வளர்ச்சி என்ற பெயரால் காவு கொடுத்துவிட்டு நிற்கிற நம் தலைமுறைத் தவறை முகத்திலறைந்தாற் போல் சுட்டிக்காட்டி விட்டு பதினைந்தே நிமிடங்களில் முடிந்து போகிறது - "கர்ண மோட்சம்".

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை, வசனம் எழுதி சென்னை எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரியின் மாணவர் முரளி மனோகர் இயக்கிய 'கர்ண மோட்சம்' தேசிய அளவில் 2008ம் ஆண்டிற்கான சிறந்த கலை மற்றும் பண்பாட்டுக் குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருக்கும் கூத்துக் கலையின் இன்றைய நிலையையும், கூத்துக் கலைஞர்களின் வறுமை பீடித்த வாழ்க்கையையும் எவ்வித மிகையும் இல்லாமல் மிக நுட்பமான காட்சியமைப்புகளாய் இக்குறும்படம் பதிவு செய்திருக்கிறது. உயிரோட்டமான கதைக் கருவும், நிதர்சனமான வசனங்களும், ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதையும் ஒரு குறும்படத்திற்குரிய எல்லைகளைத் தாண்டி கனமான
அதிர்வுகளையும் ஒருவித குற்ற உணர்ச்சியையும் நமக்குள் உருவாக்குகின்றன.

கதை இதுதான். கர்ண மோட்சம் கூத்தில் கர்ணன் வேஷம் கட்டும் கோவிந்தன், ஒரு பள்ளியில் கூத்து நடத்துவதற்காக கிராமத்திலிருந்து தனது பத்து வயது மகனுடன் சென்னைக்கு வருகிறார். எதிர்பாராத விதமாக பள்ளி நிர்வாகி ஒருவர் இறந்து போனதால் அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. 'கூத்து கட்டினால் பணம் கிடைக்கும். தன் மகன் ஆசைப்பட்ட கிரிக்கெட் மட்டையை வாங்கித் தரலாம்' என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்த கோவிந்தனின் கனவு தகர்ந்து போகிறது. ஊருக்குப் போகக்கூட பணமின்றி, பள்ளித் தலைமையாசிரியரின் உதவிக்காக, ஒரு டீக்கடையின் வாசலில் பசியோடு தன் மகனுடன் காத்திருக்கிறார். அதே கடையில், முதலாளியின் திட்டுகளையும் அடிகளையும் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் வாய் பேச முடியாத சிறுமி ஜானகி, தன் முதலாளிக்குத் தெரியாமல் கர்ண வேஷத்தில் இருக்கும் கோவிந்தனுக்கு இட்லி கொண்டு வந்து கொடுக்கிறாள். இதனால் நெகிழ்ந்து போன கோவிந்தன் ஜானகிக்கு கூத்துக் கலையின் குரு வணக்கத்தையும்,
முதல் அடவுப் பாடத்தையும் கற்றுத் தர ஆரம்பிக்கிறார். ஆனால் பாதியிலேயே கடை முதலாளி ஜானகியை அடித்து இழுத்துச் செல்ல, மனம் வெறுத்துப் போய் தன் கிரீடத்தையும் ஆபரணங்களையும் சாலையில் எதிர்ப்படும் சிறுவர்களுக்குக் கொடுத்துவிட்டு தன் ஊரை நோக்கி நடப்பதாக கதை முடிகிறது.

படம் நெடுக ஏராளமான திரைக்கதை உத்திகளைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். படத்தின் முதல் காட்சியிலேயே கோவிந்தனின் மகன் சாலையில் கிடக்கும் காலி பெப்ஸி பாட்டிலை எடுத்து குடிக்க முயல்வதும், டீக்கடையில் ஒரே ஒரு வடையை வாங்கித் தன் மகனிடம் கொடுத்துவிட்டு, கோவிந்தன் வெறும் தண்ணீரோடு திருப்திப்பட்டுக் கொள்வதும் கூத்துக் கலைஞர்களின் வறுமையைச் சொல்லாமல் சொல்கிறது. கர்ணன் வேஷம் கட்டிக்கொண்டு, சிறுமியிடம் யாசகமாக இட்லி வாங்கிச் சாப்பிடுவது, நிஜக் கர்ணர்கள் எதையும் கொடுக்கிற நிலையில் இல்லை என்பதை உணர்த்துகிறது. கூத்தின் முக்கிய அம்சமே கூத்துக் கலைஞர்கள் பாடும் பாடல்கள்தாம் என்றாலும், தன் கலையைக் கற்றுக் கொள்ள முன்வந்த ஒரே காரணத்திற்காக வாய் பேச முடியாத பெண்ணுக்குக் கூட கூத்துக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தர கோவிந்தன் முயல்வது, தான் கற்ற கலையை எப்படியாவது அழிவிலிருந்து காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற கூத்துக் கலைஞர்களின் ஆதங்கத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. ஜானகிக்கு கூத்து கற்றுத் தரும் அதே வேளையில், கோவிந்தனின் மகன் ரோட்டில் கிடந்த பொம்மை செல்போனில் டெண்டுல்கரிடம் நலம் விசாரிப்பதும், பெப்ஸி உமாவிடம் விஜய் படப் பாடல் போடச் சொல்லி விளையாடுவதும், இன்றைய சூழலில் கூத்துக் கலைஞர்களின் வாரிசுகளுக்கு அக்கலையைக் கற்றுக் கொள்வதற்கு சிறிதும் ஆர்வமில்லை என்பதை தெளிவாக்குகிறது. இறுதிக்காட்சியில் கோவிந்தன் தனது கிரீடத்தையும், ஆபரணங்களையும் ரோட்டில் எதிர்படும் சிறுவர்களிடம் கொடுத்து விட்டு நடக்கும் காட்சி, கோவிந்தனும் இனி கூத்து கட்டுவதை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போய்விடுவாரோ என்ற பதபதப்பை உருவாக்குகிறது.

திரைக்கதைக்கு அடுத்து படத்தின் முக்கியமான அம்சம் எஸ். ராமகிருஷ்ணனின் வசனம். எந்தவித மேதவித்தனமும் இல்லாமல், கூத்துக் கலைஞர்களின் வேதனைகளை அவர்களின் வார்த்தைகளைக் கொண்டே உரையாடல்களாக வடித்திருப்பது பாராட்டுக்குரியது. "எத்தனையோ பேரு உசுரைக் குடுத்து வளர்த்த கலையை, இன்னிக்கி டிவிப்பொட்டி முழுங்கிடுச்சு" என்பது போன்ற வசனங்கள் சாட்டையடியாய் உறைக்கின்றன.

தற்போதைய தேசிய விருதிற்கு முன்பாகவே கர்ணமோட்சம் தமிழக அரசின் 2005 -2006 ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான பிரிவில் சிறந்த இயக்கம் , சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த பதனிடல் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளைப்
பெற்றுள்ளது. அதே ஆண்டில் கேரளாவில் நடைபெற்ற உலகத் திரைப்படவிழா மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழா உள்ளிட்ட பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுள்ளது. அத்துடன் திருப்பூரில் நடைபெற்ற குறும்பட போட்டியில் முதல் பரிசும், சென்னையில் உள்ள அஸ்விதா என்ற அமைப்பு நடத்திய நடத்திய குறும்படப் போட்டியில் சிறந்த இயக்கத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. மேலும் தினமணியும் நெய்வேலி புத்தகசந்தையும் இணைந்து நடத்திய குறும்பட போட்டியில் பதினைந்தாயிரம் ருபாய் பணத்துடன் கூடிய முதல் பரிசை வென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற International Students Film Festival,.First Frame 2008 என்ற பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்தபடமாக தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 25000 பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது. ஜெர்மன், இஸ்ரேல் ,போலந்து, பிரான்ஸ், செர்பியா. துருக்கி, தைவான், சிங்கப்பூர் , ஆஸ்திரியா, பெல்ஜியம் உள்ளிட்ட இருபத்தைந்து நாடுகளில் இருந்து மொத்தம் 91 படங்கள் திரையிடப்பட்டன. பர்ஸ்ட் பிரேம் திரைப்பட விழாவில் தமிழ் படம் ஒன்று இந்தியாவின் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.

இக்குறும்படத்தை இயக்கிய திரைப்படக் கல்லூரி மாணவரான முரளி மனோகர் தற்போது இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். கர்ண மோட்சம் மட்டுமின்றி ஜெமினி திரைப்பட நிறுவனத்தில் மெஸ் நடத்திய மணியம் பற்றி "அக்காலம்" என்ற பெயரில் ஒரு ஆவணப்படமும் இயக்கியிருக்கிறார். இக்குறும்படத்தின் இசையமைப்பாளரான இரா.பிரபாகர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். முக்கிய வேஷத்தில் கூத்துக் கலைஞராக நடித்தவர் கூத்துபட்டறையில் பயின்ற ஜார்ஜ்.

"அசல் மகா பாரதத்தைப் பாமர மக்களுக்கும் புரியுற மாதிரி எளிமையா தெருக் கூத்துகளில்தான் சொல்வாங்க. முன்னெல்லாம் அதுக்குத் தெரு நிறையக் கூட்டம் வரும். ஆனா, சேட்டிலைட் சேனல்கள் முன்னாடி போட்டி போட முடியாம அவங்க முடங்க வேண்டிய கட்டாயம். தப்பிப் பிழைக்க வழி தெரியாம ராமனா நடிக்கிறவர், 'என் பேரு படையப்பா'னு குத்து டான்ஸ் போட ஆரம்பிச்சார். அபார திறமை தேவைப்படும் ஒரு நுணுக்கமான கலை, அழிவின் விளிம்பில் இருப்பதைப் பதிவு பண்ணணும்னு நினைச்சேன். அதுதான் 'கர்ண மோட்சம்' படத்தின் மையக் கரு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்தான் படத்துக்குக் கதை, வசனம். தேசிய விருது போக, கனடாவில் உலகத் தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகள், இந்திய அளவில் மூன்று விருதுகள், மாநில விருதுகள்னு இதுவரை 25 விருதுகளுக்கு மேலே குவிச்சிருக்கார் எங்க கர்ணன். படிக்கப் பணம் இல்லாம நான் கஷ்டப்பட்டபோது எல்லாம் நான் கேட்காமலேயே நூறு, இருநூறுன்னு பணத்தை என் கையில் திணிச்ச என் செட்டி மண்டபம் கிராம மக்களுக்கு இந்தப் படத்தைக் காணிக்கையாக்குறேன்!'' என்று நெகிழ்கிறார் முரளி மனோகர்.

"கர்ண மோட்சம்" குறும்படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

Wednesday, January 13, 2010

சென்னையில் ஓர் அறிவுத் திருவிழா !!

"ஒரு நல்ல புத்தகம் திறக்கும் பொழுது நரகத்தின் வாசல் மூடப்படுகிறது."

திருவிழா என்ற பதத்திற்குக் குறைவாக வேறு எந்த வார்த்தையையும் நீங்கள் நிச்சயமாக உபயோகப்படுத்த முடியாது - சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை புத்தகத் திருவிழாவைக் குறிப்பிடுவதற்கு.

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகிப் போன சென்னை புத்தகத் திருவிழா, தொடர்ந்து 33வது ஆண்டாக சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் கடந்த டிசம்பர் 30 முதல் ஜனவரி 12 வரை இனிதே நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு 585 அரங்குகள், 390 பதிப்பாளர்களுடன் நடைபெற்ற புத்தகத் திருவிழா, இந்த வருடம் 11/2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 606 அரங்குகள் , 405 பதிப்பாளர்கள் மற்றும் 10000க்கும் மேற்பட்ட புதிய நூல்களுடன் வாசகர்களைச் சந்தித்தது.

டிசம்பர் 30 அன்று, புத்தகத் திருவிழாவினைத் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, "எனக்குப் புத்தகங்கள் பிடிக்கும். வாசிப்பு பிடிக்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் அறிஞர்களின் பக்கத்தில் உட்காரத்தான் மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு நீங்கள் என்னை அழைக்காதிருந்தாலும் நானாக வந்து முன் வரிசையில் ஒரு பார்வையாளனாக அமர்ந்திருப்பேன். [சென்ற ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கு கலைஞர் வரவில்லை) ஒரு எழுத்தாளனாக எனக்குக் கிடைக்கக்கூடிய விருதுகளும் கௌரவங்களும்தான் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. என் ஆட்சியை யார் பாராட்டினாலும் எனக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.." என்று வெகுவாக உருக்கம் காட்டினார். அதே சமயம் சென்ற வருடம் சிறந்த ஆங்கில எழுத்தாளர் விருது பெற்ற முத்தையா எழுதிய "Chennai - Revisited" ஆங்கில புத்தகத்தின் காலவரிசைப் பட்டியலில் தனது பெயர் குறிப்பிடப்படாததைச் சொல்லி சூரியனாகச் சுட்டார். (ஆனால் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆர் ஆகியோரின் பெயர்கள் அந்த காலவரிசைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது ! ). கலைஞர் பேசி முடித்து கிளம்பிய உடனேயே, வாசகர்கள் "Chennai - Revisited" மற்றும் அதன் தமிழாக்கமான "சென்னை - மறுகண்டுபிடிப்பு" (கிழக்கு பதிப்பகம்) புத்தகங்களை ஆவலோடு தேடிச்சென்று வாங்கியதைப் பார்க்க முடிந்தது. (http://nhm.in/shop/978-81-8493-234-8.html)

வழக்கம் போல, இந்த முறையும் மாலை வேலைகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. உரை அரங்கம், பட்டிமன்றம், கவிதைத் திருவிழா போன்றவற்றில் திரளான வாசகர்கள் கலந்து கொண்டனர். இலக்கிய, திரையுலக ஆளுமைகளான கமல், எஸ்.ராமகிருஷ்ணன், கவிக்கோ.அப்துல் ரகுமான், கவிஞர். மு. மேத்தா, கவிஞர்.பா. விஜய், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சுகி. சிவம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில், தங்கள் கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

3ம் நாள் விழாவில் "சினிமாவும் இலக்கியமும்" என்ற தலைப்பில் பேசிய கமல், இலக்கியவாதிகள் திரைப்படத்துறைக்கு வந்தால் தான் நல்ல திரைப்படங்களைத் தர முடியும் என்றார். அதே நோக்கில் தான் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை திரைப்படத்துறைக்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் அவரைச் சரியாக பயன்படுத்த முடியாமல் பல நேரங்களில் சமரசம் செய்ய வேண்டியிருந்ததையும் குறிப்பிட்டார்.

தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களான சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், பா. ராகவன் ஆகியோர் ஏறக்குறைய தினமும் வெவ்வேறு அரங்குகளில் வாசகர்களை சந்தித்தனர்.

இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் புத்தகங்களில் ஒன்றான "ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்" (கிழக்கு பதிப்பகம்) (http://nhm.in/shop/978-81-8493-311-6.html) புத்தகத்தின் ஆசிரியரும், முன்னாள் சி.பி.ஐ தலைமை புலனாய்வு அதிகாரியுமான கே. ரகோத்தமன் வாசகர்களுடன் கலந்துரையாடுவற்காக கிழக்கு அரங்கிற்கு வந்திருந்தார். எந்தவொரு தொழில்முறை எழுத்தாளரும் பொறாமை கொள்ளும் வகையில் வாசகர் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது. கிட்டத்தட்ட
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வாசகர்களின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் நின்று கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ("உட்கார்ந்து பேசுங்களேன்" என்று சொன்னதற்கு "நான் போலீஸ்காரன், எனக்கு உட்கார்ந்து பழக்கமில்லை" என்றார்)

காலச்சுவடு பதிப்பகத்தின் பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இரண்டு புத்தகங்களுக்கு ஒரு புத்தகம் என்ற சலுகையை அறிவித்திருந்தார்கள். வேறு ஏதோ பதிப்பகம் 600 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் இலவசமாக சூட்கேஸ் வழங்குவதாக அறிவித்திருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் ஈழப் பிரச்சனை குறித்த புத்தகங்கள் முக்கால்வாசி அரங்குகளில் நீக்கமற நிறைந்திருந்தன. அதே போல தந்தை பெரியாரின் சுய சரிதையான, ப.சு. கவுதமன் தொகுத்த "ஈ. வெ. ராமசாமி என்கின்ற நான்" புத்தகமும் பரவலான கவனத்தைப் பெற்றது.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் இன்னொரு முக்கியமான பிரபலம் - லிச்சி ஜூஸ். ஒரு முழு டம்ப்ளர் - பத்து ரூபாய். அதன் சுவையும் மணமும், ஆகா! அற்புதம். அதே போல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்டாலிலும் மக்கள் வெள்ளம்.

பல்வேறு துறை பிரபலங்களும் புத்தக சந்தையில் தாங்கள் வாங்கிய புத்தகங்களைப் பற்றி இணையங்களிலும், பத்திரிக்கைகளிலும் எழுதி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக இணைய உலகின் சூப்பர் ஸ்டார் புத்தக திருவிழா தான்.

புத்தகப் பிரியரான இயக்குனர் மிஷ்கின், இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் தான் வாங்கிய புத்தகங்களாகப் பட்டியலிட்டவை:

சொற்கள் - ழாக்பிரேவர்
குட்டி இளவரசன் - அந்துவாந்த் எக்ஸ்பெரி
Crocodile fever - Zai Whitaker
Spiders - K.Vijayalakshmi
Land of green plums - Herta Muller
Moonwalk - Michael Jackson
What the Dog Saw - Malcolm Gladwell
The Buddha - Osho
Commentaries on Living - Jiddu Krishnamurti

தி.மு.க. வழக்கறிஞர் ஜோதி, சுமார் 60000 மதிப்புள்ள புத்தகங்களை மொத்தமாக வாங்கிச் சென்றிருக்கிறார். (உபயம் : மிஸ்டர் கழுகு - ஜூ.வி)

பபாசியின் புதிய நிர்வாகம் நடத்தும் முதல் புத்தகக் கண்காட்சி என்பதால், விளம்பர உத்திகளிலும், கட்டமைப்பிலும் சற்று முன்னேற்றம் தென்பட்டது. ஆனாலும் சுகாதாரம் போன்ற அடிப்படை விஷயங்களில் இன்னும் அதிக அக்கறைக் காட்டியிருக்கலாம். பரிசுக் குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களையே பரிசாக அளித்தது பாராட்டத்தக்கது.

எதிர்பார்த்ததிற்கும் மேலாக 10 லட்சம் வாசகர்கள் கலந்து கொண்ட ஒரு அறிவுத் திருவிழா இனிதே நடந்து முடிந்தது. சென்னை, ஜனவரியின் மற்றொரு கொண்டாட்டமான சங்கமத்திற்குத் தயாராகி விட்டது.

புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் கொண்டாடுவது ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளங்கள். புத்தகங்களின் தலைப்பும் வடிவமும் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றன, ஆனால் இலக்கு ஒன்றுதான் - "மானுடம்"

Thursday, January 7, 2010

வீதியில் தேசம்

சாலையோரச் சிறார்கள்...

இவர்கள் வானத்தைத்
தொலைத்த வண்ணப் பறவைகள்.

முகாரியில் முனங்கும்
சின்னக் குயில்கள்.

யாரோ சிலரின்
தவறுகளால் நிரந்திரமாகச்
சிலுவையிலறையப்பட்ட
சின்னயேசுக்கள்.

இந்நாட்டு மன்னர்கள்
இவர்கள், தங்கள் ராஜ்ஜியங்களை
வீதியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்

குழலாகும் முன்பே
பற்றி எரிகின்ற
மூங்கில் குருத்துக்கள்

பசியைப் பால்யவிவாகம்
செய்தவர்கள்

இந்த சாலைப் பூக்களைப்
பார்க்கும் நேரம்
என் விழிகளில்
மழைக்காலம்

நேற்றுவரை
இச்சிட்டுகளுக்கு
நாம் என்ன செய்தோம் ?

போகட்டும் நண்பரீர் !

வீரியமிலா விதையும்
மனிதமிலா மனிதனும்
ஒன்றென்று இன்று
அறிந்தோம்.

வாருங்கள்
இந்த சாலைப் பூக்களுக்கு
நிழல் தருவோம்.

இனி நம்
கிழக்கில் மட்டுமல்ல
மேற்கிலும்
விடியல் வரும் !!

Friday, May 16, 2008

தகவல் பெறும் உரிமைச் சட்டம் - ஒரு பார்வை

இந்தியன் திரைப்படம் கிட்டத்தட்ட நாம் எல்லோரும் பார்த்திருப்போம். அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்சத்தையும் மெத்தனப் போக்கையும் திரையில் பதிவு செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்று.

லஞ்சத்தின் பரவலைக் காட்டுவதற்காக இயக்குநர் எடுத்துக்கொண்ட களம் - வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். மிகச்சரியான தேர்வு.உங்களுக்கு "எட்டு" போடத் தெரியுமோ இல்லையோ, அரசு இயந்திரத்துக்கு நீங்கள் கட்டாயம் "துட்டு" போட்டாக வேண்டும். காற்றைப் போல கையூட்டு முழுமையும் பரவியிருக்கும் இடம் அது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சற்றும் குறைவில்லாதவை நம்ம ஊர் தாசில்தார் அலுவலகங்கள். மற்ற இடங்களில் எல்லாம் மேசைக்கடியில் இருக்கும் லஞ்சம், இங்கு மட்டும் சர்வ சுதந்திரமாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும். கிராமங்களே இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கும் இந்தக் காலங்களில் கூட எந்த ஒரு சான்றிதழுக்கும், கிராம அலுவலரின் கையொப்பம் அவசியமாக இருக்கிறது. அதன்பின் வருவாய் அலுவலர், கடைசியில் தாசில்தாரிடம் வருகையில் குறைந்தபட்சம் இருநூறு ரூபாய்கள் "அழ" வேண்டியிருந்திருக்கும். பணம் வாங்குவது மட்டுமல்ல, அவர்களின் அதிகாரத் தோரணையும், நடந்து கொள்ளும் விதமும் முகம் சுழிக்க வைப்பன.

இவையெல்லாம் என் நேரடி அனுபவங்களே! சென்ற முறை இந்தியா சென்ற போது, புதிதாக வாங்கிய வீட்டிற்கு சில வேலைகளுக்காக தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. அதிகபட்சம் அரைமணி நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய வேலைக்கு கிட்டத்தட்ட ஒரு முழுநாள் ஆகியது. லஞ்சத்தைத் தாண்டியும் என்னை மிகவும் காயப்படுத்திய விஷயம் இது. ஒரு கடைநிலை ஊழியர்கூட நான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும், ஆதிசேஷன் பூமியைச் சுமப்பதைப் போலத் தான் மட்டுமே இந்த மொத்த அரசாங்கத்தையும் தலையில் சுமப்பதாக எண்ணம்.

இந்த "பேசா மடந்தைகளை"ப் பேசவைக்க ஒரு வழி பிறக்காதா? என அடிக்கடி நினைப்பதுண்டு. சென்ற மாதம் தினமலரில் படித்த செய்தி சந்தோசத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேரக் கொடுத்ததோடல்லாமல் நான் தேடிய வழி பிறந்ததையும் சொன்னது.

செய்தி இது தான்.

"கோவில்பட்டியில் ஒரு சமூக சேவகர், காவல்துறை உதவியுடன் தாசில்தார் அலுவலகக் கோப்புகளை ஆய்வு செய்திருக்கிறார். பணத்தைக் கண்டால் மட்டுமே வாயைத் திறக்கும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் முதல்முறையாக ஒரு சாதாரணக் குடிமகனின் கேள்விகளுக்கு முக்கியமாக பணம் வாங்காமல் பதில் சொல்லியிருக்கிறார்கள்"

நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. எப்படி இது சாத்தியப்பட்டது ? அன்று அப்பர் சுவாமிகள் பதிகம் பாடி ஊமைகளைப் பேச வைத்தாரெனில், இன்று இவர்கள் பேசியது ஒரு சட்டத்தின் காரணமாக....

அதுவே "தகவல் பெறும் உரிமைச் சட்டம்"

வாக்குச்சீட்டினைப் போலவே, இந்தியக் குடிமகனுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வலிமையான ஆயுதமிது, அலாவுதீன் பூதத்தைப் போல நீங்கள் கேட்பவற்றையெல்லாம் (தகவல்கள் மட்டும் !!! ) தரக் கூடியது.

தகவல் உரிமை பெறும் சட்டமானது, 15.06.2005 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று 22.10.2005 முதல் அமலாக்கப்பட்டது. நம் தமிழகத்தில் 1997ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி முதலே இச்சட்டம் நடைமுறையிலிருந்தாலும், மத்திய அரசு மூலம் அக்டோபர் 2005 முதல் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாடு முழுதும் "கட்டாயமாக" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் நோக்கமே, அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்திறனிலும் வெளிப்படையான நிலை, செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடைமையை மேம்படுத்துதல், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள வழி செய்வதே ஆகும்.

இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் பாதிக்கும் விஷயங்களைத் தவிர அரசு சார்ந்த எந்தவொரு தகவலையும் நாம் கேட்டுப் பெற முடியும். இதற்கென மத்திய, மாநில, மாவட்ட அளவில் தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியிலும், மாநில அளவிலும் தகவல் ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தத் தகவல் ஆணையங்கள், தேர்தல் ஆணையங்களுக்கு இணையான அதிகாரம் கொண்டவை. தமிழகத் தகவல் ஆணையம், ஒரு தலைமை ஆணையரையும், நான்கு மாநில தகவல் ஆணையர்களையும் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.

தகவல் உரிமைச்சட்டம் பிரிவு 6ன்படி, நீங்கள் ஏதேனும் தகவல் பெற விரும்பினால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுத்து வடிவிலோ, அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் இன்றைய கட்டணமாக ரூபாய் 10 மட்டும் பணமாகவோ, வரைவோலையாகவோ (DD) அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் நீங்கள் பெற விரும்பும் தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் அத்தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்கும் உரிமை பொது தகவல் அலுவலர்க்குக் கிடையாது. நீங்கள் பெற விரும்பும் தகவல் இன்னொரு அரசு அலுவலகம் சார்ந்தது எனில், தகவல் அலுவலரே உங்களது விண்ணப்பத்தை உரிய இடத்திற்கு அனுப்பி வைப்பார். இது ஐந்து நாட்களுக்குள் செய்யப்படும்.

விண்ணப்பம் பெறப்பட்ட, 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலர் நீங்கள் பெற விரும்பிய தகவல்களை அளிப்பார். 30 நாட்களுக்குள் தகவல் தரப்படா விட்டால், மேல்முறையீடு செய்யலாம். இதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாநிலத் தகவல் ஆணையத்திடம், முதல் மேல் முறையீடு 30 நாட்களுக்குள்ளும், இரண்டாம் முறையீடு முதல் முறையீட்டின் முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள்ளும் செய்ய உரிமை உண்டு. இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படி மேல் முறையீடு செய்யப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கப்படும். பிரிவு 20ன் படி, பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுப்பாரெனில், தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ 250/- அபராதமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். எனினும், மொத்த அபராதத் தொகையானது ரூ. 25000/- க்கு மிகாமல் இருக்கும். மேலும் பொதுத் தகவல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைக்கும்.

நீங்கள் பெற விரும்பும் தகவல் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் உட்பட தகவல் உரிமை சட்டம் பிரிவு 8 மற்றும் 9 களில் விலக்களிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றியெனில் உங்கள் விண்ணப்பம் தகுந்த காரணங்களை விளக்கி நிராகரிக்கப்படும். இவை தவிர அரசு ஆணை (GO) எண்கள் 1042, 1043, 1044, மற்றும் 1045 களின் படி, குற்றப்புலனாய்வுத்துறை, தனிப்பிரிவு, பாதுகாப்புப்பிரிவு உட்பட 30 அரசு அலுவலகங்களை, தகவல் உரிமைச் சட்டம் மூலமாக, தகவல் பெற அணுக முடியாது.

மக்களாட்சியில் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளைப் பொதுமக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள வழி செய்யும் தகவல் உரிமைச் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.

இச்சட்டம் பற்றி மேலும் அறிய, தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் கையேட்டினைப் படித்துப் பாருங்கள்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:

தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375,
முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.

தொலைபேசி எண் 044-24357580

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:

மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன்
2 வது தளம், பி-பிரிவு.
நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056

தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137

எல்லாம் சரி, இப்பொழுது உங்கள் மனதில் நிழலாடும் சந்தேகங்கள் எனக்குப் புரிகிறது. அதெப்படி இத்தனை முக்கியமான சட்டத்தினை, நம்மை ஆளுபவர்கள் தாமாக முன்வந்து அமுல்படுத்தினார்கள் ? மக்களை வெறும் ஓட்டுப் போடும் இயந்திரங்களாக மட்டுமே பார்க்கும், அவர்களை அதே நிலையில் வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளுக்கு இந்த யோசனை எப்படி வந்திருக்கும் ?

உங்கள் சந்தேகங்கள் மிகச் சரியானவையே. உங்களுக்குத் தெரியுமா? இன்று நடைமுறையில் இருக்கும் தகவல் உரிமைச் சட்டம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகால போராட்ட வரலாறு கொண்டது.

நிச்சயம் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

தரக்குறிப்பு: ( References)

1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 வழிகாட்டி கையேடு. தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை வெளியீடு.

Thursday, May 8, 2008

நளவெண்பா கதை

பெயர்க்காரணம்:

காலையில் எழுந்ததும் நினைக்கத் தகுந்தவர்களில் நளனும் ஒருவன் என்கிறார் வாரியார் சுவாமிகள். அத்தகைய சிறப்புமிக்க நளனது சரித்திரத்தைக் 'கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாறும் வேட்ப' க்கூறும் நூலாகையால் நளவெண்பா எனப் பெயர் பெற்றது.

கதைச்சுருக்கம்:

நிடத தேசத்து வேந்தனாகிய நளன் கல்வி கேள்விகளில், வீர தீரத்தில் தன்னிகரற்றவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். சமையல் கலையில் கைதேர்ந்தவன். இன்றைக்கும் கூட சிறந்த சமையலைப் பாராட்டும்போது நளபாகம் என்கிறோம்.

விதர்ப்ப தேசத்து இளவரசியாகிய மங்கை தமயந்தி அன்றலர்ந்த மலர் போல் அழகும் பொலிவும் கொண்டவள். நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனும் நால்வகை குணங்களையே, தேர், குதிரை, யானை, காலாள் எனும் நான்குவகை சேனைகளாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும், நல்வழி நடத்திச் செல்கின்ற அமைச்சர்களாகவும், காலில் அணிந்துள்ள சிலம்பே பேரிகையாகவும், வேற்படையும், வாள்படையுமே இரு கண்களாகக் கொண்டு பெண்மையினை ஆட்சி புரிகின்ற பெண்ணரசியாவாள்.

இத்தகைய சிறப்புமிக்க தமயந்தியின் குணநலன்களை அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன் அவள்பால் காதல் கொண்டான். தன் உள்ளக்கிடைக்கையை அன்னத்தின் வாயிலாக தமயந்திக்குத் தூதாக அனுப்பினான்.

அன்னம் நளனது ஆண்மைச்சிறப்பையும், ஆட்சித்திறமையையும், அறிவுக்கூர்மையையும், பண்பினையும் சொல்லக் கேட்ட கணம் முதலே, தமயந்தி தன் உயிரை அவனுக்கு உயில் எழுதினாள். உண்மைதான், அன்பெனும் பெருவெள்ளத்தின் முன் யார்தான் எதிர்த்து நிற்க முடியும் !!

இந்நிலையில், தமயந்தியின் சுயம்வரத்திற்கு அவளது தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். நளனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்திரன் முதலான தேவர்களும், இடர் செய்யும் கலியும், பல நாட்டு வேந்தர்களும் கூடியிருந்தும், தமயந்தி நளனுக்கே மாலையைச் சூட்டினாள்.

இதனால் கோபம் கொண்ட கலி, நளனுக்கும், தமயந்திக்கும் பல்வேறு துன்பங்களை விளைவித்து இருவரையும் தனியாக்கினான். காலம் முழுதும், நிரந்திரமாகச் சூரியனை மறைத்திடும் வலிமை மேகத்தின் கைகளுக்கு இல்லை அல்லவா ? எந்தப் பிழையும் செய்யாத குற்றமற்றவனான நளன் நீண்ட சோதனைகளுக்குப் பின், தமயந்தியுடன் இணைந்து நீண்ட காலம் நல்லாட்சி புரிந்தான்.

இதுவே நளவெண்பாவின் சாரம். நளனைப் பற்றி வேறு பல தமிழ் இலக்கியங்களிலும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சிவமகாபுராணத்தில் நளனது முற்பிறப்பு பற்றிக் கூட விவரிக்கப்பட்டுள்ளதாக, வாரியார் சுவாமிகள் தனது "சிந்தனைச் செல்வம்" நூலில் குறிப்பிடுகிறார். இது இன்னொரு தனிப் பதிவிற்கான குறிப்பு. சிவமகாபுராணம் நூலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் நளனது முற்பிறப்பு பற்றிய கதையினைத் தனியே பதிவிடுகிறேன்.

நூல் அமைப்பு:

நளவெண்பா மூன்று காண்டங்களை உடையது.

சுயம்வர காண்டம் - இக்காண்டம் முழுமையும், காதலும், இன்பமும், அழகியலும் விரவிக் கிடக்கின்றன. நளனும், தமயந்தியும் காதல் வசப்படுவதும், சுயம்வரத்தின் மூலம் தமயந்தி நளனைத் தன் கணவனாகத் தேர்ந்தெடுப்பதும் மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன. நிடத நாட்டு வளமும் விதர்ப்ப தேசத்துச் சிறப்பும் அழகான உவமைகள் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இது 168 வெண்பாக்களைக் கொண்டது.

கலிதொடர் காண்டம் - சுயம்வரத்தில், தமயந்தியால் நிராகரிக்கப்பட்ட கலி, சினங்கொண்டு, நளனையும், தமயந்தியையும் சதியால் பிரித்து தொடர் துன்பங்கள் விளைவிப்பதை விவரிக்கும் காண்டமாகும். இது 147 வெண்பாக்களைக் கொண்டது.

கலிநீங்கு காண்டம் - கலியின் தொல்லைகள் நீங்கி, நளனும் தமயந்தியும் இல்லறம் திரும்புதலை விவரிக்கும் காண்டமாகும். இது 89 வெண்பாக்களைக் கொண்டது.

சகுனியின் சூழ்ச்சியால், நாடு, நகரம், அனைத்தையும் இழந்து காட்டில் இருந்த தருமரின், கவலையைப் போக்கி நம்பிக்கை அளிக்கும் விதமாக, வியாசர் அவருக்கு நளனது கதையைச் சொல்வது போல் நளவெண்பா இயற்றப்பட்டுள்ளது.

நூலாசிரியர் - புகழேந்திப் புலவர்.

தமிழ் இலக்கிய உலகில், கம்பனுக்கு நிகரான, புலமையும், கற்பனைச்செறிவும் கொண்டவர் புகழேந்திப் புலவர். வெண்பாக்கள் பாடுவதில் வல்லவர். "வெண்பாவுக்கோர் புகழேந்தி" எனப் போற்றப்பட்டவர். ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவர். சோழன் பாண்டியன் மகளை மணந்தபோது, அறிவு திருத்தும் நல்லாசிரியராக சோழநாட்டுக்கு வந்தவர். குலோத்துங்கச்சோழனது வேண்டுகோளுக்கிணங்க நளவெண்பாவைப் பாடினார்.

இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு வெண்பாவின் பொருளையும், சிறப்பையும் ஆராய்வோம்.

குறிப்பு:

"மதுரைத் திட்ட" த்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள நளவெண்பா மின்நூலினை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட பதிவு.